தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, விளையாட்டு விடுதி மாணவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு வீரர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும், ஊட்டச்சத்து மிக்க உணவுக்காகவும் தினசரி உணவுப்படி உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறும் 2,600 மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, உணவுப்படி, சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தினசரி உணவுப்படியானது ஒரு நாளைக்கு ரூ.350-லிருந்து ரூ.450 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், உணவுக்கான செலவினத் தொகை ரூ.29.12 கோடியிலிருந்து ரூ.37.44 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரூ.8.32 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடாகும்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளுக்கான தொகை ரூ.6,000-த்திலிருந்து ரூ.15,000 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான தொகை ரூ.10,000-த்திலிருந்து ரூ.25,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான தொகையும் ரூ.2,000-த்திலிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மூலம் விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.