மாணவி கொலை: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்த நீதிபதி

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில், போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்புக்கு முன்னதாக, குற்றவாளியிடம் நீதிபதி சில கேள்விகளை எழுப்பினார். 'உங்களை சார்ந்து உங்கள் குடும்பத்தில் யாரும் உள்ளனரா?' என்று கேட்டபோது, 'தாய் மட்டும் தான் உள்ளார், மனைவியும் மகளும் பிரிந்து சென்றுவிட்டனர்' என பதிலளித்தார்.

முன்னதாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என நீதிபதி குறிப்பிட்டார். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை படித்தபோது, குற்றவாளி எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டான் என்பது தெரியவந்ததாகவும், தன் மகள் போன்ற ஒரு குழந்தையை இதுபோன்று கொடூரமான செயலில் ஈடுபடும்போது, அவளை பாதுகாக்க வேண்டும் என தோன்றவில்லையா என்றும் நீதிபதி தர்மமுனீஸ்வரனிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த கொடூர செயலுக்கு ஆயுள் தண்டனை வழங்குவது சரியல்ல என்றும், அரசு தரப்பில் குற்றத்திற்கு ஏற்ப பெரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி தரப்பில் தண்டனையை குறைப்பதற்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை என்றும், இந்த தண்டனை பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அதன் பிறகு இரட்டை தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த மார்ச் 12-ம் தேதி மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் 12 மணி நேர மறியலில் ஈடுபட்டனர். புகாரை பெறாமல் அலட்சியமாக செயல்பட்ட விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காமல் திணறினர். வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் கொடுத்த ரகசிய தகவலை தொடர்ந்து, காற்றாலை கோபுர சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரனை போலீசார் மார்ச் 19-ம் தேதி கைது செய்தனர். பின்னர், குளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மார்ச் 20-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் வேடநத்தம் காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்து சம்பவம் குறித்து நடித்து காட்டச்செய்து வீடியோ பதிவு செய்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவியின் உடல் 10 நாட்களுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version