தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், தனது 'எக்ஸ்' தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்று, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவரான வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமக்கு மிக பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் அதை நோக்கியே நமது பயணத்தைத் தொடர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
'ஆகவே, கழகத் தோழர்கள் எவரும், பிறந்தநாள் விழாக்கள் அல்லது குடும்ப விழாக்கள் தொடர்பாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ பேனர்கள், பதாகைகள் போன்றவற்றை எங்கும் வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எந்தவிதக் கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது' என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 'பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எதன் மூலமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக யாரேனும் நடந்துகொண்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்' என்றும் என். ஆனந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.