இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த நிலையில், சாய் சுதர்சனை நீண்ட கால மூன்றாவது விக்கெட் பேட்ஸ்மேனாக வளர்க்க விரும்பும் இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் குவித்த தேவ்தத் படிக்கல், கொழும்பு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 117 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். சாய் சுதர்சன் காயம் அடைந்ததால் மட்டுமே படிக்கலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சாய் சுதர்சன் காயமடைந்தாலும், அவரை நீண்ட கால அடிப்படையில் 3 வது இடத்தில் களம் இறக்கவே கம்பீர் திட்டமிட்டுள்ளார். ஆனால், படிக்கலின் இந்த தொடர் சதங்கள் அணி நிர்வாகத்தின் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது.
இது குறித்துப் பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், 'முதல் டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் குவித்து, தற்போது மீண்டும் சதம் அடித்துள்ள படிக்கலை அணியில் இருந்து எவ்வாறு நீக்க முடியும்? கௌதம் கம்பீருக்கு வேறு வேலை இல்லை. இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற பலவீனமான அணிகளுக்கு எதிராக வென்றுவிட்டு அவர் துள்ளிக்குதிப்பார்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கம்பீர் ஒரு நல்ல வீரர் மற்றும் ஆட்டத்தை நன்கு கணிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் வீரர்களுடன் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டும். கம்பீர் முன்பு சிறந்த வீரராக இருந்தார், தற்போதும் ஆட்டத்தை நன்கு அறிவார், ஆனால் அவர் தனது முடிவுகளில் வீரர்களிடம் கூடுதல் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் நாளில் தேவ்தத் படிக்கல் 193 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்தார். மைதானத்தில் சுமார் 5 மணி நேரம் போராடிய அவர், இறுதியில் ஆஃப் ஸ்பின்னர் கேசரா நுவந்தா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஆரம்பத்தில் இலங்கை வீரர்கள் சோனல் தினுஷா மற்றும் கேப்டன் தனஞ்செயா டி சில்வா ஆகியோர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டதை அடுத்து, படிக்கல் நிதானமாக விளையாடினார்.
கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 120 ரன்களும், ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 74 ரன்களும் சேர்த்து இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 300 ரன்கள் எடுக்க உதவினார்.
தொடர்ந்து அசத்தி வரும் தேவ்தத் படிக்கலின் இந்த ஆட்டம், இந்திய அணி நிர்வாகத்திற்கும், குறிப்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சாய் சுதர்சன் இனி இந்திய அணியை விட்டு விலகி இருக்கணும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேவ்தத் படிக்கலின் சிறப்பான ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன், அணி நிர்வாகத்தின் திட்டமிடலிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
