அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் நோக்கில் 'ஸ்டார்ஷிப்' என்ற பிரம்மாண்ட ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இந்த அதிநவீன ராக்கெட்டின் 12-வது சோதனை ஓட்டம், டெக்சாஸ் மாகாணத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
விண்ணில் சீறிப்பாய்ந்த இந்த ராக்கெட், திட்டமிட்டபடி போலி செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியது. பின்னர், கடலில் விழுந்து தீப்பந்தமாக வெடித்துச் சிதறியது. இந்த வெற்றிக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளார். இதற்கு முன்னர் நடந்த பல சோதனைகள் நடுவானிலேயே வெடித்துச் சிதறி தோல்வியில் முடிந்தன. என்ஜின்களை மேம்படுத்தி இந்த முறை வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு மையம், வருகிற 2028-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சீனா 2030-க்குள் நிலவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்த சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளார். இது எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.