சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருந்த சினேகா மோகன்தாஸ், தனது பதவிகளை ராஜினாமா செய்து அதிரடியாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது மக்கள் நீதி மய்யத்தில் மீண்டும் ஒரு முக்கிய நிர்வாகி விலகும் நிகழ்வாக அமைந்துள்ளது.
'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை உத்வேகமாகக் கொண்டு, ஆதரவற்றோர் மற்றும் வீடற்றவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவளித்து வரும் சினேகா மோகன்தாஸ், 'ஃபுட் பேங்க் இந்தியா' என்ற அறக்கட்டளையின் நிறுவனராகவும் உள்ளார். இவர், பசியற்ற நாட்டை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்த இவருக்கு, சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு சினேகா மோகன்தாஸ் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், 'அரசியலில் நுழைவதற்கு முன்பே, எனது பயணம் மக்கள் சேவையை நோக்கியே அமைந்திருந்தது. 'ஃபுட் பேங்க் இந்தியா' மூலம் கடந்த பத்து வருடங்களாக பின்தங்கிய சமூகத்தினருக்கு ஆதரவளித்து வருகிறேன். 2020 மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் எனது பணி அங்கீகரிக்கப்பட்டது. அப்போது, கமல்ஹாசன் எம்பி அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்காக அழைத்தார். நேர்மை, தகுதி மற்றும் மக்களுக்கான முன்னுரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் கலாச்சாரத்தை இந்த இயக்கம் உருவாக்கும் என்று நம்பி இணைந்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், '2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு, பெண்களுக்கான பணிக்குழுத் தலைவர், மாவட்டச் செயலாளர், மகளிர் அணியின் மாநிலச் செயலாளர் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் பாக்கியத்தைப் பெற்றேன். பேரிடர் நிவாரணப் பணிகள், குடிமை சார்ந்த முன்னெடுப்புகள், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகள், பொது நலத் திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள், பூத் மேலாண்மை மற்றும் அடிமட்ட அளவிலான மக்கள் தொடர்பு என எனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் எனது முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினேன். இந்த பயணம், மாற்றம் என்பது நாம் நினைப்பதை விட மிகவும் சிக்கலானது என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. நான் அரசியலில் நுழைந்தபோது எனக்குள் இருந்த சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனாலும், எனக்குக் கிடைத்த பாடங்கள், நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக இந்த அனுபவத்தை நன்றியோடு பார்க்கிறேன். எனவே, மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன். பொது சேவைக்கான எனது அர்ப்பணிப்பு என்றும் மாறாது. 'ஃபுட் பேங்க் இந்தியா' மற்றும் 'தலைவி' அமைப்புகளின் மூலம் தொடர்ந்து சமூகத்திற்கு சேவை செய்வேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.