கல்வி நிறுவனங்களுக்குள் சாதி, மத அடையாளங்களுடன் நுழையக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சாதி, மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டி போட்டிவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிற்குதான் இடம். சாதிய பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கயிறு கூட மாணவர்கள் பள்ளிக்கு கட்டிவரக்கூடாது' என்று கூறினார்.
பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாணவர்களை போதையின் பாதைக்கு செல்லாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும், பிரிவினையையும் வேற்றுமையையும் வளர்க்கும் எதற்கும் இங்கு இடமில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 5,000 பள்ளிகளில் AI கோடிங் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கு முன்னதாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நடப்பு ஆண்டு தேர்ச்சி விகிதம் நன்றாக இருந்தாலும், அதனை மேலும் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.