சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ. 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது.
திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் ஈரநில ஆணையத்திடமிருந்து (Wetland Authority) முறையான அனுமதியைப் பெறத் தவறியதால், இந்த சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால், அந்த வழக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு எந்த விதமான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, கட்டுமான நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அந்த இடம் சதுப்பு நிலம் இல்லை. குறிப்பிட்ட இடம் பட்டா நிலம் தான் என்பதற்கு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால், உரிய அனுமதிக்கு பிறகே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. சட்டவிரோதமாக எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளவில்லை' என தெரிவிக்கப்பட்டது.