பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், சிங்கப்பெண் அதிரடிப்படை ஒரு பிரத்யேக உதவி எண்ணை அறிவித்துள்ளது. இனி, `1091' என்ற இலவச எண்ணை அழைத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நேரடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் உதவியை நாடலாம். இந்த புதிய உதவி எண், அவசர கால உதவி எண்ணான 112 உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த 1091 உதவி எண், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற காவலர்களால் கண்காணிக்கப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த சேவை கிடைக்கும். மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் சிங்கப்பெண் படைக்காக கூடுதல் அழைப்பு ஏற்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த எண் மூலம் உடனடி தீர்வு கிடைக்கும். குடும்ப வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் தொந்தரவுகள், மிரட்டல்கள் மற்றும் உடனடி காவல் உதவி தேவைப்படும் சூழல்களில் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறை சம்பவங்களுக்கும் இந்த பிரத்யேக எண் மூலம் உதவி கோரலாம். சிங்கப்பெண் அதிரடிப்படையின் இந்த புதிய அறிவிப்பு, மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.