பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' களத்தில் இறங்கியுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பெண் குழுவினர் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், மற்றும் 'குட் டச் – பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தொந்தரவுகள் அல்லது ஆபத்துகள் குறித்து 1098 குழந்தைகள் உதவி எண்ணை உடனடியாகத் தொடர்புகொள்ள அறிவுறுத்தினர். சிங்கப்பெண் போலீசாரை அழைத்தால், மின்னல் வேகத்தில் உதவிக்கு வந்து சேருவோம் என மாணவிகளுக்கு நம்பிக்கை அளித்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் பெண் பிள்ளைகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், இணையதள குற்றங்கள், சமூக வலைதளப் பயன்பாட்டில் கவனிக்க வேண்டியவை மற்றும் சுய பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். உதவி ஆய்வாளர் லிடியாசெல்வி, எந்த சூழ்நிலையிலும் அச்சப்படாமல் பிரச்சனைகளை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை'யினர், பேருந்து நிலையத்திற்கு வரும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது ஈவ்-டீசிங் போன்ற தொல்லைகளோ ஏற்பட்டால் உடனடியாகத் தங்களை அணுகுமாறு அறிவுறுத்தினர். இத்திட்டத்திற்காக பிரத்தியேக சைரன் மற்றும் நவீன வசதிகள் கொண்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களுக்கு இந்த ரோந்துப் பணி பெரும் மன தைரியத்தையும் பாதுகாப்பையும் தரும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் பெண் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் மாணவிகளிடையே தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உணர்வை அதிகரித்துள்ளதாக கல்வியாளர்களும் பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர்.
