வாக்குகள் வேட்டையாடுவதற்காக அரசியல் தரம் தாழ்ந்து மலினமான அரசியல் செய்யப்படுகிறதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள் வரை கரூரில் உயிரிழந்த குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய், அதிமுக உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த பிறகு உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா 35 லட்சம் ரூபாய் வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும். இது ஒருபோதும் ஏற்க முடியாதது.
கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக் கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது ஏற்கவே முடியாத பேரவலம். இது சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரமாகும். இந்த துயரத்தில் உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்ட பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அரசு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காகப் பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராமல், இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது? கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்த நொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காமல், தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம்.
கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காமல், விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காமல், ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்!
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல. அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்கள், ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது மிகத் தவறானப் போக்காகும். ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
