தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல், காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கம்பீரமாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள பெங்களூரு அணிக்கு, இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, மைதானத்தில் பந்தைத் தடுக்க டைவ் அடித்த போது ஜேக்கப் பெத்தேலுக்கு இடது கையின் மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடவில்லை. தற்போது அவரது காயம் குணமடையக் கூடுதல் காலம் எடுக்கும் என்பதால், அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து திரும்ப முடிவு செய்துள்ளார்.
இது குறித்து பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜேக்கப் பெத்தேலுக்கு விரலில் ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவர் மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்து திரும்புகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராகத் தொடங்க உள்ள டெஸ்ட் தொடரில் பெத்தேல் பங்கேற்க வேண்டியிருப்பதால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அவரை உடனடியாகத் திரும்ப அழைத்துள்ளது.
தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் பெங்களூரு அணிக்கு, பெத்தேலின் விலகல் பேட்டிங்கில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்த அணியின் மற்றொரு அதிரடித் தொடக்க வீரரான பில் சால்ட் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது ரசிகர்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. அடுத்த போட்டியில் பில் சால்ட் மீண்டும் தொடக்க வீரராகக் களம் இறங்குவார் எனத் தெரிகிறது. இதனால் கடந்த போட்டியில் தொடக்க வீரராக ஆடிய வெங்கடேஷ் ஐயர், மீண்டும் தனது பழைய இடமான நடுவரிசைக்குத் தள்ளப்படுவார். மே 26-ம் தேதி தரம்சாலாவில் நடைபெற உள்ள மிக முக்கியமான முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், இந்த அதிரடி மாற்றங்களுடன் பெங்களூரு அணி களம் காண உள்ளது. காயங்கள் ஒருபுறம் இருந்தாலும், கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி தீவிரமாக உள்ளது.