குஜராத் அணிக்கு எதிரான வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி அடுத்த போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 16 பந்துகளில் அரைசதத்தை எட்டி அசத்தினார். 30 பந்துகளில் சதம் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்களுடன் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி, குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, ‘இன்றைய வெற்றியை அடுத்த போட்டிக்கும் கொண்டு செல்ல வேண்டும். அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார். மேலும், ‘அடுத்த ஆட்டத்திலும் எனது வழக்கமான ஆட்டத்தை விளையாட முயற்சிப்பேன். அதிகமாக யோசிக்க மாட்டேன். ஆனால், நான் மேம்படுத்த வேண்டிய ஒன்று இருப்பதாக உணர்ந்தால், அதைக் கவனிப்பேன்’ என்றும் கூறினார்.
போட்டிக்கு தயாராவது குறித்து கேட்டபோது, ‘எதிரணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் யார், இந்த விக்கெட்டில் அவர்களை நான் எப்படி எதிர்கொள்ள முடியும், பவுண்டரிகள் எவ்வளவு பெரியவை போன்ற விஷயங்களைப் பற்றி சிந்திப்பேன். நேர்மறையாக இருக்க முயற்சிப்பேன். அவ்வாறு இருக்கும்போது, பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள். எனவே, அதைத் தொடரவும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிப்பேன்’ என வைபவ் சூர்யவன்ஷி பதிலளித்தார். கிறிஸ் கெயிலின் சாதனையை தவறவிட்டது குறித்து கேட்டபோது, ‘நான் ஆட்டமிழந்த பிறகுதான் அது குறித்து எனக்குத் தெரிந்தது. அணிக்காக என்னால் முடிந்தவரை பங்களிப்பதே என் ஒரே நோக்கமாக இருந்தது. ஏனென்றால், சதங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆனால் கோப்பையை எப்படி வெல்வது என்பதில்தான் எனது கவனம் உள்ளது’ என்று அவர் கூறினார்.