டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சீசன் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருடன் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய வரும் 19-ம் தேதி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கூடவுள்ளனர். இந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் ஆகிப் நபி தாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், ஜூன் 6 முதல் 10 வரை சண்டிகரில் டெஸ்ட் போட்டியும், அதைத் தொடர்ந்து ஜூன் 14, 17, 20 ஆகிய தேதிகளில் தர்மசாலா, லக்னோ, சென்னையில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் இந்த டெஸ்ட் போட்டி வராததால், பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து ஒருநாள் தொடரில் மட்டும் விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பும்ரா இல்லாத பட்சத்தில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்து வீச்சை வழிநடத்துவார்கள்.
ஜம்மு – காஷ்மீர் அணி இந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் முதன்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இவருக்கு, முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும்.
சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களது இடங்களைத் தக்கவைத்துக் கொள்வார்கள். அக்சர் படேலின் இடம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மானவ் சுதர் அல்லது ஹர்ஷ் துபே பரிசீலிக்கப்படலாம். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். பேட்டிங்கில் 3-வது இடத்திற்கு தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் இளம் வீரர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.