ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் வரும் ஜூன் 26ஆம் தேதிக்குள் (26.6.26) தங்களுக்கு அருகிலுள்ள நியாய விலைக் கடைகளுக்குச் சென்று ஒரு முக்கியப் பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த பதிவை செய்து முடிக்க வேண்டும். இது ரேஷன் அட்டை தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து பெறவும் அவசியமாகும்.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த முக்கியப் பணியை ஜூன் 26ஆம் தேதிக்குள் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரேஷன் கார்டு கைரேகை பதிவை எப்படி செய்வது என்ற முழுமையான செயல்முறை இதோ:
முதலில், உங்களது ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் செல்லுங்கள். அங்குள்ள ஊழியரிடம் கைரேகை பதிவு செய்ய வந்திருப்பதைத் தெரிவிக்கவும். அவர் உங்களது ரேஷன் அட்டை விவரங்களை e-POS கருவியில் பதிவு செய்து, பின்னர் ஆதார் எண்ணைச் சரிபார்ப்பார். அதன் பிறகு, கைரேகை ஸ்கேனர் கருவி மூலம் உங்கள் விரலை ஸ்கேன் செய்து பதிவு செய்வார். கருவியில் பதிவாகும் கைரேகை, ஆதார் தரவுத்தளத்தில் உள்ள கைரேகையுடன் பொருந்த வேண்டும். அதன் பின்னரே ரேஷன் அட்டை கைரேகை இணைக்கப்படும்.
ரேஷன் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கைரேகை பதிவு செய்ய முடியும். எனவே, உங்கள் ரேஷன் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் இவை இரண்டும் இணைக்கப்படவில்லை என்றால், தேவையான ஆவணங்களுடன் ரேஷன் கடை ஊழியர்களை அணுகி முதலில் அந்தப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும்.