கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங், 'காந்தாரா' படத்தில் வரும் 'தெய்வா' கடவுளைப் போல் முகபாவனைகளை கிண்டலாக செய்து, அவர் ஒரு பேய் என்று விமர்சித்தார். இது துளு மொழி பேசும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தில், நடிகர் ரன்வீர்சிங் தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்தது. மேலும், தெய்வா கடவுள் மற்றும் கர்நாடக மக்களின் ஆன்மிக நம்பிக்கை குறித்து அறிய மைசூரு சாமுண்டி மலைக்கு செல்லவும் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், நடிகர் ரன்வீர்சிங் நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்றார். அங்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அப்போது, தான் தெய்வா கடவுளை அவதூறாக விமர்சிக்கவில்லை என்றும், தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் வேண்டினார்.
கோவிலின் தலைமை அர்ச்சகர் அவருக்கு பிரசாதம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட ரன்வீர்சிங், அம்மன் முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரன்வீர்சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' மற்றும் 'துரந்தர்-2' திரைப்படங்கள் உலகளவில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.