பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே ஓராண்டிற்கும் மேலாக நீடித்த மோதல் போக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் பாமக தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும், கட்சி முடிவெடுக்கும் உரிமை மற்றும் கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்தும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இருவரும் தங்கள் தரப்பில் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினர். இதனால், இவர்களுக்கிடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்நிலையில், ராமதாஸை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இன்று தைலாபுரம் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். தனது தந்தையின் 61வது ஆண்டு திருமண நாளையொட்டி, ராமதாஸை குடும்பத்துடன் சென்று அன்புமணி ராமதாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸை ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர், தாய் மற்றும் தந்தையிடம் அன்புமணி ராமதாஸ் ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 'இனி நல்லது நடக்கும்' என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் மூலம், தந்தை மற்றும் மகனுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் ஒற்றுமை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. தந்தையின் திருமண நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சந்திப்பு, இருவருக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என நம்பப்படுகிறது.