புதுடெல்லி: நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை, வெறும் நிர்வாகக் குறைபாடு மட்டுமல்லாமல், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு குற்றம் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்களை அடுத்து ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. வினாத்தாள் கசிவு மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும், மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் அபிஷேக் சிங் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கடுமையான உழைப்பு, அவர்களது தியாகங்கள் மற்றும் கனவுகள் அனைத்தும் இந்த ஊழல் நிறைந்த பாஜக அரசால் சிதைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வை எழுதுவதற்காக சில தந்தைகள் கடன் வாங்கினர், சில தாய்மார்கள் தங்கள் நகைகளை விற்றனர். லட்சக்கணக்கான மாணவர்கள் இரவு பகலாக கண்விழித்துப் படித்தனர். ஆனால், இதற்கெல்லாம் கிடைத்த பரிசு என்னவென்றால், வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறையில் திட்டமிட்டு நடக்கும் ஊழல் மட்டுமே. இது வெறும் தோல்வியல்ல, மாறாக, இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும்.
ஒவ்வொரு முறையும், வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் எந்தவிதத் தண்டனையும் இல்லாமல் தப்பிவிடுகிறார்கள். அதேசமயம், நேர்மையான மாணவர்கள்தான் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இப்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் மீண்டும் மன உளைச்சல், பொருளாதாரச் சுமை, மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள நேரிடும்.
ஒருவருடைய எதிர்காலம் கடின உழைப்பால் அல்லாமல், பணம் மற்றும் செல்வாக்கால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்றால், கல்விக்கு என்ன பொருள் இருக்க முடியும்? பிரதமரால் 'அமிர்த காலம்' என்று கூறப்படும் இந்தக் காலகட்டம், நாட்டிற்கு ஒரு 'விஷக் காலமாகவே' மாறிவிட்டது' என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.