பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கவிழ்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சதி செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரிலேயே ராகுல் காந்தி செயல்படுவதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் ஆலோசனைக் குழு கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓராண்டுக்குள் கவிழும் என்று பேசியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் சதித் திட்டம் அம்பலமாகிவிட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், 'ராகுல் காந்தியின் இந்த கருத்து, காங்கிரஸ், பல எதிர்க்கட்சிகள் மற்றும் ‘டூல்கிட் கும்பல்’ ஆகியவை இணைந்து இந்தியாவை நிலைகுலையச் செய்ய நினைக்கும் ஒரு பெரிய சதியை சுட்டிக்காட்டுகிறது. இது ஒரு சாதாரண கருத்து அல்ல, மாறாக நாட்டில் அராஜகத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கடுமையான சதி' என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் களத்தில் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்பதையும், மக்கள் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதால் அவரை அகற்ற முடியாது என்பதையும் உணர்ந்த ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகளும் நாடு முழுவதும் வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா ஒரு வீடியோ செய்தியில், 'நாட்டில் கலவரங்களைத் தூண்டி, அராஜகத்தின் மூலம் மோடி அரசை வீழ்த்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். ஜார்ஜ் சோரஸ் போன்ற தனது எஜமானர்கள் மற்றும் அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு நிதியளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில், ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டு திட்டத்தை செயல்படுத்துகிறார் என்பதை அவரது கருத்துக்கள் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகின்றன. மோடி அரசுக்கு மக்களின் ஆசி இருக்கும் வரை, அது நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்யும்' என்று கூறியுள்ளார்.