இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்தச் சூழலில், நுகர்வோருக்கும் அடுத்த ஷாக் காத்திருக்கிறது. தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயரவுள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், பால் வணிகத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவையையும் கருத்தில் கொண்டு, தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை போட்டி போட்டு உயர்த்தி வழங்குகின்றன. இதனால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட, பால் விலையை உயர்த்தும் முடிவுக்கு நிறுவனங்கள் வந்துள்ளன.
இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில், அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியிருந்தன. தற்போது, இரண்டாவது முறையாக மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன.
அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம், நாளை (9-ந் தேதி) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்விற்குப் பிறகு, 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.29-ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும் மாறும். மேலும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விலை ரூ.39-ல் இருந்து ரூ.41 ஆக உயர்கிறது.
இதேபோல், 1000 மில்லி (1 லிட்டர்) சமன்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.54-ல் இருந்து ரூ.57 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.66-ல் இருந்து ரூ.69 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விலை ரூ.73-ல் இருந்து ரூ.76 ஆகவும் உயர்கிறது. தயிர் விலையிலும் இந்த உயர்வு பிரதிபலிக்கும்.
குறிப்பாக, 500 கிராம் ஹட்சன் தயிரின் விலை ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும், ஆரோக்யா தயிரின் விலை ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு, அன்றாட தேவைகளுக்காக பாலை நம்பியிருக்கும் சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
