நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் 'பேங் பேங்'. இந்தப் படத்தை சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். கேஆர்ஜி கண்ணன் ரவி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். மேலும், பப்லு பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வேணு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இந்தப் படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. டீசரில், ஜோம்பிக்களால் சூழப்பட்ட பின்னணியில் பிரபுதேவா மற்றும் வடிவேலு துப்பாக்கிகளுடன் தோன்றிய காட்சிகள் வைரலாகின. 'பிரபு வேலு', 'வடி தேவா' போன்ற நகைச்சுவை கலந்த பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டின. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், படக்குழுவினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் மவுண்ட் புரோமோ எரிமலைப் பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.