திருநெல்வேலி மாவட்டத்தில், பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022-ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக்காக வரும் சிறுமிகளிடம் மதபோதகர் ஆபிரகாம் (வயது 47) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தேவாலயத்திற்கு வந்த நான்கு சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து ஆகஸ்ட் 20 அன்று உத்தரவிட்டார். மேலும், பாலியல் தொல்லைக்கு ஆளான நான்கு சிறுமிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு விவரங்களைக் கேட்டதும் ஆபிரகாம் நீதிமன்ற அறையிலேயே மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
