தற்சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 'மன் கீ பாத்' நிகழ்ச்சியின் 135வது அத்தியாயத்தில் பேசிய அவர், கடந்த ஆறு மாதங்களில் நாடு அடைந்துள்ள முக்கிய தற்சார்பு சாதனைகளை பட்டியலிட்டார். விமான தொழில்நுட்பத் துறையில் சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். குஜராத்தின் வதோதராவில் 40 விமானங்கள் தயாரிக்கப்படுவதால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விமானத் துறை பயனடைவதோடு, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் சமீபத்தில் ஐ.என்.எஸ். துனகிரி, ஐ.என்.எஸ். ஷன்சோதக் மற்றும் ஐ.என்.எஸ். அக்ரே ஆகிய மூன்று போர்க்கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று கப்பல்களும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொலைதூர நில தாக்குதல் ஏவுகணையான எல்.ஆர்.எல்.ஏ.சி.எம்., சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை, தொழிற்துறை கூட்டாளிகள் மற்றும் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம், பி.டெக். பட்டப் படிப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடங்களை தொடங்கவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் கூறினார். இது, நாட்டின் பாரம்பரிய அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அவர் தெரிவித்தார். உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்திய கலாச்சாரம் பரவி வருவதையும் அவர் குறிப்பிட்டார். கரீபியன் தீவு நாடான டொமினிக்கன் குடியரசில், இந்தியர்கள் அல்லாத உள்ளூர் மக்களே இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேத இலக்கியத்தை பயின்று வருவதாகவும், 'பிரம்மகமல் டொமினிகானா' என்ற குழுவை தொடங்கி வேத பாராயணங்களை கற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேற்காசியாவில் ஏற்பட்ட போர் காரணமாக, மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பயணங்களை குறைத்து, குழுவாக கார்களில் பயணிக்கும் 'கார் பூலிங்' முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தான் விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் செவிசாய்த்து ஆதரவு அளித்ததாக பிரதமர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நிலத்தை காக்க இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கும் விவசாயிகள் ஆதரவு அளித்ததாகக் கூறி, நாட்டு மக்களுக்கு தனது நன்றியை காணிக்கையாக்கினார். தேச கட்டுமானத்தில் மக்களின் பங்களிப்பு நிச்சயம் வெற்றியை ஈட்டித் தரும் என்றும் அவர் கூறினார்.