தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சென்னை வானகரத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் இணைப்பு விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதிய உறுப்பினர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக உறுதிமொழி ஏற்றனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'ஆறு முறை ஆட்சி புரிந்த, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞர் 50 ஆண்டுகள் தாங்கி பிடித்த இயக்கத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலில் உதயசூரியன் சின்னத்தில்தான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய பிறகும், சட்டமன்றத்தில் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு பேசிய உறுப்பினரை கண்டித்து, 'எனக்கு தலைவர் கலைஞர்' என்று எம்ஜிஆர் கூறியது வரலாறு. நான் சாதாரண இளைஞனாக இருந்தபோது, நாடகம் பார்க்க வந்த எம்ஜிஆர் தரையில் அமர்ந்து பார்த்தார். இன்று அதே இயக்கத்தில் தலைமை தொண்டனாக உங்களை வரவேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளேன்' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், உண்மையாக உழைத்தவர் என்றும், சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் பேசக்கூடியவர் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 'எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் நீங்கள் பதவிக்காக, பவுசுக்காக இல்லாமல் கொள்கைக்காக இணைந்துள்ளீர்கள். திமுக வலுவாக இருந்தால்தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்ந்தது. தினமும் ஒரு திட்டம் என்ற அடிப்படையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உலக அளவில் பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தன. வேலைவாய்ப்புகள் பெருகின. ஆனால், தற்போது ஆட்சி மாற்றத்தால் தமிழ்நாடு அகல பாதாளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம், கொள்ளை, பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமைச்சர்களே சம்பந்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் என மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்குகின்றன. உலகின் பல நாடுகள், தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளன. லண்டன் மாநகரிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. 'தமிழ்நாடு' என பேரறிஞர் அண்ணா வைத்த பெயர் உள்ளவரை அவரது பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதுபோல் திமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளவரை மு.க.ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; மூன்று மாதங்களில் கூட வரலாம், ஆறு மாதங்களுக்குப் பிறகும் வரலாம். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும். தவெக 108 இடங்களில்தான் வென்றன. திமுக வெற்றி பெற வேண்டும்; ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில்தான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும். இந்த நிமிடத்திலிருந்து திமுகவின் வெற்றிக்காக உழைக்க தயாராக இருங்கள். உங்களுக்கான அடையாளம் உங்களைத் தேடி வரும்' என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளி வீர வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.