தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பது குறித்து வரும் 4-ம் தேதி சென்னையில் நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் தனது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார். அப்போது, 'தமிழக முதல்வரை நடிகர்கள், நடிகைகள் எளிதாக சந்திக்க முடிகிறது. ஆனால், மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை நாங்கள் சந்திக்க முடியாத நிலை உள்ளது' என வருத்தம் தெரிவித்தார்.
நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியதை நினைவுகூர்ந்த கிருஷ்ணசாமி, 'தற்போது விஜய்யின் அரசு தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகக் கூறுவது மட்டும் போதாது, செயலில் அது வெளிப்பட வேண்டும். விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு பூரண மதுவிலக்கை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், சுமார் 700 மதுபான கடைகளை மட்டுமே மூடியுள்ளனர். டாஸ்மாக் தமிழக சமூகத்தின் மிகப்பெரிய கேடாக உள்ளது. டாஸ்மாக்கை மூடினால்தான் முழுமையான தீர்வு கிடைக்கும். அன்று பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக விஜய் கூறினார், இன்று பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வாங்கப்படுகிறது. அன்று குற்றம்சாட்டப்பட்ட விஷயம் இன்று நியாயப்படுத்தப்படுகிறது. இது எப்படி சரியாக இருக்க முடியும்?' என கேள்வி எழுப்பினார்.
மேலும், 'தமிழக அரசு ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கியிருப்பதாகக் கூறுவது மட்டும் போதாது. அந்த பணம் எப்படி செலவிடப்பட்டது, ஊழல் நடந்ததா என சுட்டிக்காட்டி வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் உடனிருந்தார்.