சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் தொடர்ச்சியான சுமை என்றும், எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது நாடு முழுவதும் மக்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று லிட்டருக்கு ரூ.105.31-க்கு விற்பனையான பெட்ரோல் இன்று ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77-ஆகவும், டீசல் ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் தொடர்ந்து பலமுறை எரிபொருள் விலை உயர்த்தப்படுவது சாதாரண மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் ஒரு பொருளாதார தாக்குதலாக மாறியுள்ளது.
இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், காய்கறி, மளிகை, பால், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பணவீக்கம், வேலைவாய்ப்பு நெருக்கடி, வருமான குறைவு ஆகியவற்றால் சிரமப்படும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களிலும் இந்தியாவில் அதற்கேற்ப விலை குறைக்கப்படவில்லை என்பது மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டாகும். மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வரி வசூல் மற்றும் லாப நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி மக்களின் நலனை புறக்கணிக்கின்றன என்ற உணர்வு வலுப்பெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான மத்திய மற்றும் மாநில வரிகள் மொத்த விலையின் பெரிய பகுதியை நிர்ணயிப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எரிபொருள் மீதான அதிகப்படியான கலால் வரி மற்றும் செஸ் வரிகளை குறைக்க வேண்டும், எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி விலை உயர்த்தும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விலை நிலைத்தன்மைக்கான தனி கொள்கையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் எரிபொருள் விலை உயர்வை அரசு அலட்சியமாக பார்க்காமல் உடனடியாக தலையிட்டு விலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
