டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடிக்கும் முதல் வீரர் என்ற மகத்தான இலக்கை 15 வயதான இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நிர்ணயித்துள்ளார். கிறிஸ் கெயிலின் 175 ரன்கள் என்ற தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை முறியடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கெயில் இந்த சாதனையை 2013 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக படைத்தார்.
கெவின் பீட்டர்சன் தொகுத்து வழங்கிய யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய வைபவ், 'நான் டி20 போட்டியில் 200 ரன்கள் எடுக்க விரும்புகிறேன்' என்று கூறினார். கிறிஸ் கெயில் 175 ரன்கள் எடுத்ததை பீட்டர்சன் சுட்டிக்காட்டியபோது, வைபவ் தனது இலக்கை மேலும் உறுதிப்படுத்தினார். 'ஆம், நான் அவரது சாதனையை முறியடித்து 200 ரன்கள் எடுக்க விரும்புகிறேன். ஒரு போட்டியில் 20 ஓவர்களும் நான் களத்தில் இருந்தால், அதை நிச்சயமாகச் சாதிப்பேன்' என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வைபவின் இந்த மகத்தான இலக்கு சாத்தியமே என்பதை அவரது கடந்தகால ஆட்டங்கள் உணர்த்துகின்றன. விஜய் ஹசாரே டிராபியில் பீகார் அணிக்காக 190 ரன்களும், அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்களும் குவித்து அசத்தியுள்ளார். அவரது தற்போதைய டி20 அதிகபட்ச ஸ்கோர் 144 ஆகும். கடந்த ஆண்டு இங்கிலாந்து U19 அணிக்கு எதிராக 143 ரன்கள் அடித்து, 52 பந்துகளில் சதமடித்தது இளைஞர் ஒருநாள் போட்டிகளின் அதிவேக சதமாக பதிவானது.
வைபவின் துணிச்சலான ஆட்டம் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறது. 2010ல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இங்கிலாந்து U19 அணிக்கு எதிரான தனது சாதனை இன்னிங்ஸுக்குப் பிறகு அவர், 'அடுத்த போட்டியில் 200 ரன்கள் எடுக்க முயற்சிப்பேன். அணிக்கு அதிக பலம் சேர்க்க நான் முழு 50 ஓவர்களும் விளையாடுவேன்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.