நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்டது. நேற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் விலை உயர்ந்தன. இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகளும், டீசல் லிட்டருக்கு 32 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 12 நாட்களில் இது 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ. 108.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து ரூ. 99.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.