இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர், சர்வதேச, உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் 2026 சீசனுக்கான கண்டி ராயல்ஸ் அணியில் அவர் ஒரு முக்கிய வீரராக களமிறங்க உள்ளார்.
ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள வீரர்கள் ஏலத்திற்கு முன்பாகவே, கண்டி ராயல்ஸ் அணி நிர்வாகம் விஜய் சங்கரை வெளிநாட்டு நட்சத்திர வீரராகத் தேர்வு செய்துள்ளது. 35 வயதான விஜய் ஷங்கர், பிசிசிஐ விதிகளின்படி வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளார். கண்டி ராயல்ஸ் அணியில் ஏற்கனவே வனிந்து ஹசரங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் மொயின் அலி போன்ற முன்னணி வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விஜய் ஷங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2019 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக 78 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். தமிழக அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் 77 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 4,253 ரன்களையும் 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
வெளிநாட்டு லீக் தொடர்களில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடர, உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களின் பட்டியலில் விஜய் சங்கரும் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் போன்றோரும் இதேபோல் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க வேண்டி ஓய்வு பெற்றிருந்தனர். இலங்கை பிரீமியர் லீக் தொடரின் 6-வது சீசன் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதில் கண்டி ராயல்ஸ், ஜாப்னா கிங்ஸ், தம்புள்ளா சிக்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. விஜய் சங்கரின் வரவு கண்டி அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.