இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஸ்போர்ட்டை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அது குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும் மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 'வகுகக்கப்பட்ட நடைமுறைகளின்படி, முறையான சரிபார்ப்புகளுக்குப் பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ பாஸ்போர்ட் வழங்குவது என்பது, பாஸ்போர்ட் சட்டம் 1967 மற்றும் பாஸ்போர்ட் விதிகள் 1980 ஆகியவற்றின் படியே கட்டுப்படுத்தப்படுகிறது' என்று தெரிவித்தார்.
இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் படி, இந்தியக் குடிமக்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதை முறைப்படுத்துவதற்காக, இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு முக்கிய ஆவணமாக இந்திய பாஸ்போர்ட் விளங்குகிறது. மேலும், தற்போது இந்தியர்களில் 8 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பாஸ்போர்ட் வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த மாதம் ஜூன் 24 அன்று நடைபெற்ற 'பாஸ்போர்ட் சேவா திவஸ்' செய்தியாளர் சந்திப்பின் போதும், இந்திய பாஸ்போர்ட் என்பது முழுக்க முழுக்க ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அதனை குடியுரிமைக்கான சான்றாகக் கருதக்கூடாது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
பாஸ்போர்ட் என்பது இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்படுகிறது என்றாலும், அதன் முதன்மை நோக்கம் சர்வதேச பயணங்களை மேற்கொள்வதும், வெளிநாடுகளில் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதுமே ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒருவரின் பயண ஆவணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே வழங்கப்படுகிறது.
பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் இந்திய குடிமகன் அல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் ஒருவரிடம் பாஸ்போர்ட் இருப்பது மட்டுமே அவர் இந்நாட்டின் குடிமகன் என்பதற்கான 'முடிவான' அல்லது 'முழுமையான' ஆதாரம் ஆகிவிடாது என்று கடந்த 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. எனவே, பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணமாக மட்டுமே கருதப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
