சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்டவை என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஓடுதளம் அமைக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியது முற்றிலும் தவறானது. முந்தைய தி.மு.க. ஆட்சியின்போதே, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இதற்காக கையகப்படுத்தப்பட்டு, திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் பொருத்தமான இடம் என்பதற்கான விரிவான ஆய்வறிக்கையை தமிழக அரசுதான் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இரட்டை ஓடுதளங்கள் அமைப்பதற்கு ஏற்ற வகையில் அதன் திசையமைவு அமைந்திருப்பதையும் உறுதி செய்து ஆவணங்களையும் வழங்கியது.
இப்போது, அதே ஓடுதளத்தை சாத்தியமற்றது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது தொழில்நுட்பப் பிரச்சனையால் அல்ல, மாறாக மலிவான ஓட்டு வங்கி அரசியலை மனதில் கொண்டுதான். அமைச்சரின் இந்தப் பேச்சு உள்நோக்கம் கொண்டது என்றும், மாநில வளர்ச்சியை விட த.வெ.க.வின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த இந்தத் தவறான தகவலையும், நாடகத்தனமான பேச்சையும், உள்நோக்கத்தையும் தமிழக பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
