போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் என்பவர் காவல் ஆணையரகத்தில் அளித்த புகார் மனுவில், தனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அப்போதைய அமைச்சர் சிவசங்கர் ரூ.23 லட்சம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிவசங்கரின் நெருங்கிய நண்பர் இளஞ்செழியன் என்பவரின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணத்தை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல், இளஞ்செழியனும் சிவசங்கரும் தன்னை ஏமாற்றிவிட்டதாக சீனிவாசன் தனது புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, முதற்கட்டமாக இளஞ்செழியன் மீது சென்னை அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி சிக்கியுள்ள நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.