முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. திமுக ஆட்சியில் 3 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தவெக அரசு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, டி.ஆர்.பி. ராஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவெக அரசு கூறுவது பச்சை பொய் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு பேசலாம் என்றும் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, தவெக அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இதனால் தொழில்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் திறமையின்மையை மறைக்க பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், இது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் 3 கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறும் அரசின் அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்றும், பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படை புரிதலற்ற பச்சைப் பொய் எனவும் அவர் விமர்சித்துள்ளார். செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்திற்கு செல்லவில்லை, திட்டமிட்டு ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலேயே குற்றஞ்சாட்டியதை அவர் சுட்டிக்காட்டினார். இதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் திமுகவை குற்றம்சாட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் நலனைக் காவு கொடுத்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு தவெக சேவகம் செய்வது அம்பலமாகியுள்ளது என்றும் டி.ஆர்.பி. ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்னிடம் உள்ள புள்ளிவிவரங்களுடன் தவெக அரசின் பொய்களுக்கு பதிலளிக்க முடியும் என்றும், ஆனால் எதையும் புரிந்துகொள்ளும் திறனற்ற அரசு அது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முந்தைய அரசு கொண்டு வந்த முதலீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது வெட்கக்கேடானது என அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் 3 லட்சம் கோடிக்கும் குறைவாக முதலீடுகள் வந்த நிலையில், அது 12.6 லட்சம் கோடியாக உயர்ந்தது என்றும், இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்கு அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசு தொடர்ந்து இருந்திருந்தால், இந்த முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும் என்றும், தற்போதைய அரசு இதில் பாதியாவது செய்து காட்டட்டும் என டி.ஆர்.பி. ராஜா சவால் விடுத்துள்ளார்.