தமிழகத்தில் கீழ்த்தரமான அரசியலும், குதிரை பேர கலாச்சாரமும் புகுத்தப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: 'சுயம்பிரகாச தூயசக்தி' என தன்னை அறிவித்துக்கொண்ட திரையுலகப் பிரபலம், மக்களின் ஆதரவு தனக்கு இல்லை என்பதை உணர்ந்தும், தான் அமைத்த பொய்க்கால் ஆட்சியைக் காப்பாற்ற தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு மோசமான குதிரை பேர அரசியலை நடத்தி, மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்ற முனைவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். 234 தொகுதிகளில் 126 தொகுதிகளில் மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை உணராமல், எந்தக் கட்சியை 'தீய சக்தி' என்று வருணித்தாரோ அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற சில கட்சிகளை தேடிச் சென்று ஆதரவு கேட்டதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை 'புஷ்பா' பட பாணியில் ஆதரவு பெற்றதும் நேர்மையான அரசியல்வாதியின் செயலா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிமுக மீது விசுவாசம் கொண்ட தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து, சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் வாங்கி, அடுத்த 10 நிமிடத்தில் அமைச்சர் ஒருவரின் அறையில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி நாடகத்தையும், குதிரை பேரத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. தற்போதைய தவெக அரசின் இதுபோன்ற தகிடுதத்த வேலைகளை சந்திப்பது தமிழக அரசியலில் புதிதான அணுகுமுறையாகும்.
எத்தனையோ துரோகங்களையும், முதுகில் குத்திய நிகழ்வுகளையும் தாங்கி மக்கள் பணியாற்றி வருகிறது அதிமுக. இந்த அரசுக்கு ஆதரவு கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், ராஜினாமா செய்தவர்களாக இருந்தாலும், திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இதுபோன்ற துரோகச் செயல்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்கலாம்; வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். 'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' என்பதுபோல, அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
