திமுகவிடம் ஒரு எம்பி சீட், தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காங்கிரஸ் பெருமக்களிடம் நான் கேட்பது, நீங்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு மானம், ரோசம், சூடு, சொரணை, வெட்கம் இதிலெதுவும் இருக்கிறதா?' என்று ஆவேசமாக கேட்டார்.
மேலும், 'இப்போதுதான் திமுககாரனுக்கு அறிவு வருகிறது. 10 எம்.பி.க்கள் திமுக போட்ட பிச்சையில் வைத்துள்ளார்கள். நீங்கள் உண்மையில் மானஸ்தன் என்றால் எம்பி பதவிகளை ராஜினாமா செய்யுங்கள். பின்னர் த.வெ.கவுடன் இடைத்தேர்தலை சந்தியுங்கள். அதில் வென்று வாருங்கள். திமுகவிடம் ஒரு எம்பி சீட்டு, தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு?' என சீமான் சவால் விடுத்தார்.
மாணிக்கம்தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்து, தவெக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்றும், தனியாக நின்றால் டெபாசிட் கூட பெற முடியாது என்றும் அவர் விமர்சித்தார். மன்னராட்சி, வாரிசு அரசியல் என்று பேசிய முதல்வர் விஜய் இன்று மன்னர் ஆட்சியின் தோற்றுவாயான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
'நாம் நிறைய தோற்று போயிருக்கிறோம். உலக வரலாற்றில் இவ்வளவு தோல்விகளை சந்தித்த இயக்கம் வேறு இல்லை, இருக்கபோவதும் இல்லை. எத்தனை தோல்விகள் வந்தாலும் தளராமல் நிற்போம், எதற்காக நாங்கள் வெல்ல கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதற்காகவே நாங்கள் வென்றே தீருவோம், எங்களது வெற்றி சற்று தள்ளிப் போகலாம், ஆனால் நிச்சயம் வந்தே தீரும்' என்றும் சீமான் உறுதியுடன் தெரிவித்தார்.