டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை ஜூன் மாத இறுதிக்குள் முற்றிலுமாக தடுப்போம் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதியை மீறி கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் கட்டாயம் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், 'செந்தில்பாலாஜியை போல் எனக்கு ஊழல் செய்ய தெரியாது. ஊழலில் பறிபோன அனைத்து பணத்தையும் தமிழக கஜானாவுக்கு கொண்டு வருவேன். த.வெ.க ஊழலும் பண்ணாது, ஊழல் பண்றவங்களையும் விடாது. சும்மா சிரிச்சிட்டு என்ன வேணாலும் பேசிட்டு போய்டலாம்னு நினைக்கிறாங்க, விட மாட்டேன் யாரையும்' என ஆவேசமாக கூறினார்.
டாஸ்மாக்கில் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், செந்தில் பாலாஜி மாதிரி செயல்பட வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் மூடிய 717 டாஸ்மாக் கடைகள் சாதாரண வருமானம் வரும் கடைகள் அல்ல என்றும், அவை ஒரு நாளைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டக்கூடியவை என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடரும் என்றும், இந்த 5 ஆண்டு முடிவில் இந்த துறை எப்படி இருக்கப்போகுது என்பதை சேலஞ்சாக சொல்கிறேன் என்றும் அவர் கூறினார்.
டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயம் ஆக்கும் நோக்கம் எதுவும் தவெக அரசுக்கு இல்லை என்றும், ஜூன் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை தாண்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்தார்.