பழனி ஆண்டவர் கோயில் நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு தாரை வார்த்த தவெக அரசை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. திமுகவின் ஐடி பிரிவு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போல செயல்படும் தவெக அரசு, பழநி கோயில் நிலத்தை தனிநபர்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆட்சியில் சுமார் 1,316 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போதைய தவெக அரசு, பழனி பூங்கா சாலையில் உள்ள 1.40 ஏக்கர் நிலத்தை, 100 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருந்தும், வெறும் 2 கோடி ரூபாய்க்கு தாரை வார்த்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலம், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டது.
மேலும், ஜூலை 6-ம் தேதி, பழனி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியில், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும், வெளிப்படைத்தன்மையின்மையையும் அப்பட்டமாகக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்கப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துவதாகவும் திமுக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை நேரடியாக விமர்சித்துள்ள திமுக, 'கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
'பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்' என்றும் திமுக தனது கண்டனப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. இந்த செயல்பாடு ஆன்மீக பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
