காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே, காதலித்த பெண்ணின் உறவினர்களால் வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை முழுமையாக கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த வாலிபரின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

களக்காடு படலையார் குளம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்லதுரை – பேச்சியம்மாள் தம்பதியினரின் இளைய மகன் சுரேஷ் (21). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வசதி படைத்தவரான தளவாய் என்பவரின் மகளை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தளவாய், சுரேஷை அழைத்து தனது மகளுடனான காதலை கைவிடுமாறு பலமுறை எச்சரித்துள்ளார்.

கடந்த மே 1 ஆம் தேதி, காதலித்த பெண்ணின் உறவினர்கள் சுரேஷை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், பொய்யாக கைது செய்துவிட்டதாக கூறி சுரேஷின் பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட சுரேஷின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, உயிரிழந்த சுரேஷின் தாய் பேச்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் என பல்வேறு இடங்களில் மனு அளித்தும், இதுவரை கொலையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் முழுமையாக கைது செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த பேச்சியம்மாள், தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாரை சந்தித்து, 'ஒரே சமூகமாக இருந்தும், நாங்கள் ஏழைகள் என்பதால் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து என் மகனை கொன்றுவிட்டார்கள். எங்கு சென்றாலும் எங்களை மிரட்டுகிறார்கள். என் மகனின் சாவுக்கு நீதி வேண்டும்' என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version