திருத்தணி அருகே ஆடு மேய்க்காத சிறுவன் கொலை: பண்ணை உரிமையாளர் கைது

திருத்தணி அருகே ஆடுகளை சரியாக மேய்க்கவில்லை என்ற காரணத்திற்காக 15 வயது சிறுவனை பண்ணை உரிமையாளர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பண்ணை உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருத்தணிக்கு அருகில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் ஆட்டுப்பண்ணை நடத்தி வரும் முருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வெண்ணிலா மற்றும் அவரது மூன்று மகன்கள் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம், வெண்ணிலாவின் மூத்த மகனான சுரேஷ் (15 வயது) ஆடுகளை சரியாக மேய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பண்ணை உரிமையாளர் முருகன், சிறுவன் சுரேஷை கடுமையாக தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

மேலும், இந்த கொலையை மறைப்பதற்காக, பண்ணை உரிமையாளர் முருகன் சிறுவனின் உடலை பண்ணையிலேயே குழி தோண்டி புதைத்ததாகவும், கொலையை மறைக்க சிறுவனின் தாயார் வெண்ணிலாவை அங்கேயே கட்டி வைத்து சித்திரவதை செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. பண்ணையில் இருந்து எப்படியோ தப்பி வந்த வெண்ணிலா, திருத்தணி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

வெண்ணிலாவின் புகாரின் அடிப்படையில், திருத்தணி காவல் துறையினர் பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட வினோத் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version