சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (20) என்ற மாணவி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் 2024-ம் ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்த சம்பவம், கோவை மாணவி கீர்த்தனா (19) நீட் தேர்வுக்காக தயாராகி தற்கொலை செய்துகொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் போராடி வரும் நிலையில், இந்த தற்கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இத்தேர்வை நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். இவர்களுக்கான மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்த முறை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்திடாமல் இருக்க, இந்திய விமானப்படை உதவியுடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடரும் இத்தகைய துயர சம்பவங்கள் நீட் தேர்வு குறித்த அச்சத்தையும், எதிர்ப்பையும் மேலும் வலுப்படுத்துகின்றன.