உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து மீது அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், அரசுப் பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, அதனைச் சரிசெய்வதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் பழுது பார்க்கும் பணியை பார்வையிட பேருந்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
இந்தச் சமயத்தில், அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நள்ளிரவில் நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், உடனடியாக மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.