நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சிஜேபியைச் சேர்ந்த பாரதி மற்றும் தினேஷ் ஆகியோர் கூட்டாக இதுகுறித்து விளக்கினர். மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், தனிநபர் தாக்குதல் தங்கள் நோக்கம் அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வு உடனடியாக விலக்கப்பட வேண்டும் என்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அறவழியில் தங்களது போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இன்று ஐந்தாவது நாளாக தாங்கள் கூடி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் அளவில் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறினர்.
இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆட்சியின்போது அளித்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மத்திய கல்வி அமைச்சரை இந்த விவகாரத்தில் ஒரு குற்றவாளியாகக் கருதி, குறைந்தபட்ச தண்டனையாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இங்கு எந்தவிதமான வேறுபாடும் இன்றி, அனைவரும் ஒற்றுமையாக ஜனநாயக முறையில் போராடி வருவதாகவும், தமிழ்நாடு அரசு தங்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும், காவல்துறையும் கண்ணியமாக செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், நீட் தேர்வுக்கு எதிராக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் களமிறங்கியிருப்பது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

