மத்திய அரசு, பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இந்த உதவித்தொகையைப் பெற, தகுதியான மாணவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த உதவித்தொகை திட்டம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் நல அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், குறிப்பிட்ட தொழிலாளர் பிரிவினரின் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகும். இத்திட்டம், 1-ஆம் வகுப்பு முதல் உயர் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் படிப்பு நிலைக்கு ஏற்ப, குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்குச் சென்றடையும்.
கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஒரு முறை பதிவு (OTR) செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு என தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு (CBS) முறையில் இயங்கும் சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலையும் வழங்க வேண்டும்.
மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் விண்ணப்பங்களை முறையாகச் சரிபார்த்து, தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து ஆன்லைனில் ஒப்புதல் வழங்கி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் சரிபார்க்காமல் அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதால், இந்த நடைமுறையை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதிகள்: 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.08.2026 ஆகும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.10.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து, கல்வி உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தகவல்களுக்கு அல்லது சந்தேகங்களுக்கு, 'மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க. தொழில் பூங்கா, கிண்டி, சென்னை – 600032' என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044-29530169 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், wclwo.chn-mole@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அலுவலக நேரத்தில் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.

