சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனிமேல், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால், அபராதத் தொகை ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், சக பயணிகளின் வசதிக்கும், அமைதிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மெட்ரோ ரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002-ன் பிரிவு 59-ன் கீழ், மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு அளிக்கும் அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாக, அலைபேசியில் உரத்த குரலில் பேசுவது, ஹெட்போன்ஸ் பயன்படுத்தாமல் இசை அல்லது வீடியோக்களை சத்தமாகப் பார்ப்பது, மற்றும் அலைபேசியில் ஸ்பீக்கர் மோடைப் பயன்படுத்தி உரத்த ஒலியை எழுப்புவது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை.
இந்தச் செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA), கடந்த ஜூன் 19, 2026 அன்று வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, 'ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ் இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகை, பிரிவு 59-ன் கீழ், முன்னர் இருந்த ரூ.500-லிருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதிகளை மீறும் பயணிகள், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்ஸ் பயன்படுத்த வேண்டும் என்றும், மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் பேசுவதையும், ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

