தமிழக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆளும் கட்சி சார்பில் ஒருவர் முன்மொழியும் இந்த தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றுவார். தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள். வாக்கெடுப்புக்கு பின்னர், தீர்மானத்தின் வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார்.
எதிர்க்கட்சியினர் எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தக் கோரினால், சபாநாயகர் அதற்கு உத்தரவிட வேண்டும். அவைக்கு வெளியே இருக்கும் எம்.எல்.ஏ.க்களை அழைப்பதற்காக மணி ஓசை மூன்று முறை ஒலித்தபின், சட்டசபை கதவுகள் மூடப்படும். பின்னர் சட்டசபை செயலாளர், ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என தனித்தனியாக எழுந்து நிற்கக் கூறுவார். அதன் அடிப்படையில் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையை சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார்.
சட்டசபையில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் மேல் + 1 என்ற எண்ணிக்கையை தீர்மானம் பெற்றால், அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதன் மூலம் அரசு தனது பணியைத் தொடரும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால், அது ஆளுநருக்குத் தெரிவிக்கப்படும். பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், அரசு கலைக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவிட நேரிடும். இருப்பினும், த.வெ.க. அரசு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேராதவர்கள், சொகுசு பேருந்தில் சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டனர்.

