இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நடந்தது. இதில் நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகளும் ராஜஸ்தான் காவல்துறையினரும் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களிலும் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதியானது. இதனையடுத்து, நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி மற்றவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தியாக மட்டுமே இருக்கலாம். ஆனால், 'தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகத் தேர்வு எழுதுகிறேன், இது என் கடைசி முயற்சி. மருத்துவராவது உறுதி' என்று நம்பியிருந்த மாணவர்களுக்கும், 'நகை, நிலத்தை அடகு வைத்தாவது நீட் பயிற்சிக்குச் செலுத்திய கட்டணம் வீணாகாது; நம் வீட்டிலும் ஒரு மருத்துவர் உருவாகிறார்' என்று கனவு கண்ட நடுத்தர வர்க்கப் பெற்றோர்களுக்கும் இது வெறும் செய்தியல்ல; பேரிடி.
நீட் தேர்வு ரத்து குறித்துப் பேசிய பல மாணவர்கள், மீண்டும் தாங்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, 'நான் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளேன். இந்த நேரத்தில் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். தேசிய தேர்வு முகமை இவ்வளவு மெத்தனமாக எப்படி இருக்க முடியும்? மருத்துவர் கனவில் மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. வேறு படிப்பை நான் தேர்ந்தெடுத்திருந்தால், இப்போதே கல்லூரியை முடித்திருப்பேன். எங்கள் வாழ்வின் மிக முக்கியமான ஆண்டுகளையும், இளமைக் காலத்தையும், விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்தையும் நீட் தேர்வுக்காக தியாகம் செய்திருக்கிறோம். தேர்வு முடிந்ததே என்று முழுமையாக நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், எங்கள் இயல்பு நிலை மீண்டும் பறிக்கப்பட்டுவிட்டது. தேர்வு பயம் மீண்டும் தொற்றிக்கொண்டது. அதோடு, இனி எப்படி என்டிஏ-வை நம்புவது என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது' என்று வருத்தத்துடன் கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மாணவர், 'நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் நாங்கள் சந்திக்கும் கெடுபிடிகள் பற்றி நீட் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தனை ஆண்டுகளில் பலரும் எழுதியுள்ளனர். ஆனால், எதுவுமே மாறவில்லை. கிட்டத்தட்ட ஒரு குற்றவாளியைப் போலத்தான் தேர்வு அறைக்குச் செல்லும் முன் நாங்கள் சோதிக்கப்படுகிறோம். எங்களை இத்தனை கெடுபிடிகளுக்கு உள்ளாக்கும்போது, தேசிய தேர்வு முகமையால் வினாத்தாள் கசிவைத் தடுக்க முடியாதா? இது இந்த முறை மட்டும் நடந்ததல்ல. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது எங்களைப் போன்ற கடின உழைப்பைப் போட்டுவிட்டு காத்திருக்கும் மாணவர்களுக்கு, நேர்மை பயனற்றது என்ற எண்ணத்தை அல்லவா திணிக்கிறது!' என்று கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகும் அல்லது தயாராக நிர்பந்திக்கப்படும் மாணவர்கள் செல்லும் முக்கிய இடம் ராஜஸ்தானின் கோட்டா பகுதிதான். அந்த நகரம் இப்போது போட்டித் தேர்வுப் பயிற்சிகளின் மையமாக மாறிவிட்டது. நாள் முழுவதும் படிப்பு, பயிற்சித் தேர்வுகள், மதிப்பீடுகள், வீட்டிலிருந்து வரும் 'நல்லா படிச்சிடு' என்ற அழுத்தம் என ஒவ்வொரு ஆண்டும் நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கும் இளம் மனங்களின் நிலை சொல்லி மாளாது.
நீட் தேர்வுக்குப் பயந்து கோட்டாவில் மட்டுமல்லாது, பரவலாகவே தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலைகளைத் தடுப்பதற்காக மின்விசிறிகளைச் சுற்றி கம்பி வலை, கண்காணிப்புக் கேமராக்கள், மாடிக்குச் செல்ல முடியாதபடி கிரில்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், நீட் தேர்வு தொடர்ந்து மாணவர்களை அச்சுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.
'இந்த ஆண்டும் நீட் வினாத்தாள் கசிந்து முறைகேடுகள் வெளிவந்து, தேர்வு ரத்தாகியுள்ளது. ஒரு தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கிறது. நீட் தேர்வே ஒரு மோசடிதான். பழையபடி பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்' என்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: 'சில தந்தைகள் கடன் வாங்கினார்கள், சில தாய்மார்கள் தங்கள் நகைகளை அடகு வைத்தனர். லட்சக்கணக்கான மாணவர்கள் விடிய விடிய கண்விழித்து உழைத்தனர். இவற்றிற்கெல்லாம் பலனாக, கசிந்த வினாத்தாள்கள், அரசின் மெத்தனம், கல்வித்துறையில் நடக்கும் ஊழல் ஆகியவைதான் கிடைத்துள்ளன. பாஜகவின் ஊழலால் மாணவர்களின் எதிர்காலம் நசுக்கப்படுகிறது' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் போலவே, பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், மாநில அரசின் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வு வினாத்தாள்கள் கசிவதும் இன்றும் அடிக்கடி நிகழும் பிரச்சினையாகவே உள்ளது.
மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான பல சம்பவங்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களிலேயே நடக்கின்றன. இந்த முறை தேர்வு வினாத்தாளைக் கசியவிட்டதன் பின்னணியில், நாசிக் நகரைச் சேர்ந்த ஓர் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நாடு தழுவிய தேர்வுகள் புதியவை அல்ல. யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், நீண்டகாலமாகவே தேர்வுகளை நேர்மையாக நடத்தி அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து வருகிறது. ஆனால், தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வில் மட்டும் ஏன் வினாத்தாள் முறைகேடுகள், ஆள்மாறாட்டங்கள் என குழப்பங்கள் தொடர்கின்றன என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், 'மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு என்பது தேவையற்றது. இத்தனை ஆண்டுகளாகத் தேர்வு நடத்தியும் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் ஏதேனும் ஒரு முறைகேடு நடக்கிறது. இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். ஒருவேளை நுழைவுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்றால், மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும்' என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
'தமிழக அரசின் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் கூட தேசிய அளவிலான தேர்வுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்றப்பட்ட பிறகே, நீட் சுமை வேண்டாம் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால், என்டிஏ எதிலும் மாற்றம் செய்யாமல், குளறுபடிகளுக்கு வழி வகுப்பது ஏன்?' என்று சமூக நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
'நீட் தேர்வு ஏதோ தகுதி, திறமைகளை வெளிக்கொணரும் என்று உருவாக்கப்பட்ட பிம்பம் தகர்ந்து வருகிறது. தேசியத் தேர்வு முகமையே ஒரு தேர்வை முறையாக நடத்துவதற்கான தகுதியையும், திறமையையும் பெற்றிருக்கிறதா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. நீட் தேர்வைச் சுற்றி ஒரு மிகப் பெரிய மோசடி வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. நீட் தேர்வே கூடாது என்ற கோரிக்கையை தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருவதன் நியாயத்தை இந்தத் தேர்வு ரத்து மீண்டும் நிரூபித்துள்ளது. எனவே, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.