மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் கலபுராகியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. இதனால், கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்து அறிவித்தது. மேலும், நீட் தேர்வுக்கான மறுதேர்வு அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (18) என்ற மாணவி, கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதாக பெற்றோரிடம் கூறிவந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளானார். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.