பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (அர்ஷத் மதானி பிரிவு) அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதற்கு பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுவரையில் இந்து அமைப்புகளிடமிருந்து மட்டுமே இத்தகைய கோரிக்கைகள் வந்த நிலையில், முஸ்லிம் அமைப்புகளின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
'அகில இந்திய முஸ்லிம் ஜமாத்' அமைப்பின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரிஸ்வி, மதானியின் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க, விரைவில் டெல்லியில் முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய கூட்டு மனு தயாரிக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறினார்.
ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய ஷியா தனிச் சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் மவுலானா யாசூப் அப்பாஸ், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்றும், அரசின் கொள்கைகளில் இது தெளிவாகப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத்தலைவர் கவுசர் ஹயாத் கான், இக்கோரிக்கையை அரசு நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், முஸ்லிம் அமைப்புகள் ஒரே மேடையில் திரண்டால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
சன்னி பிரிவு முஸ்லிம்களின் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் மூத்த நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் பிரங்கி மெஹாலி, இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நாடு முழுவதும் பசுவதை தொடர்பான சட்டங்களில் ஒருமைப்பாடு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் 'குரேஷி' சமூகத்தினரின் அமைப்பான 'அகில இந்திய குரேஷி ஜமாத்' தலைவர் சிராஜ் குரேஷி, பசுவை தேசிய விலங்காக அறிவிக்கத் தேவைப்பட்டால் பிரதமரைச் சந்திக்க முயற்சிப்பதாகக் கூறினார். பசு வதை தொடர்பான அரசியல் ஆதாய முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலும், கும்பல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.