அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதிமுகவில் இருந்து கண்ணீருடனும் மிகுந்த மனவேதனையுடனும் விடைபெறுவதாக எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவிக்காகவோ சுயநலத்திற்காகவோ கட்சியில் இணையவில்லை என்றும், இரத்தம் சதையாக இயக்கத்தை நேசித்து வாழ்ந்தவன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த நெருக்கடி காலங்களில், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே.பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றதாக விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் அடக்குமுறையால் தன் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டதாகவும், தன் குடும்பத்தினர் மீதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்து குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, கரூர் தொகுதியில் அதிமுக கொடியை மீண்டும் ஏற்றியதில் தனக்கும் உடன்பிறப்புகளுக்கும் பங்குண்டு என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், ஜெயலலிதாவால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட திமுகவுடன் அண்ணா திமுக கைகோர்ப்பதைக் கண்டு மனம் ரத்தக் கண்ணீர் வடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த சமரச முடிவுக்குத்தான் நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, அவருடைய தலைமைக்கு எதிராக நிற்கவில்லை. ஆனால், தொண்டர்களின் உணர்வுகளை துச்சமாக மதித்து அவர் எடுத்த தன்னிச்சையான முடிவுதான் இயக்கத்தை அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாகத் தயாராக இல்லை என்றும், அதிமுகவுக்காக வாழ்நாளின் பெரும் பகுதியைக் கொடுத்துவிட்டதாகவும், இனி கரூர் தொகுதி மக்களின் சேவகனாக மக்கள் பயணம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version