திமுகவினரே அம்மாவின் மரணத்திற்கு காரணம்: மரகதம் குமரவேல் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) இணைவு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் பங்கேற்றார். அதிமுகவில் இருந்து விலகி த.வெ.கவில் இணைந்த இவர், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கடுமையாக விமர்சித்தார்.

"நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், திமுக வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு என்னை வெற்றி பெற விடாமல் செயல்பட்டார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவேன்," என்று மரகதம் குமரவேல் குற்றம்சாட்டினார்.

மேலும், "திமுக ஆதரவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க எடப்பாடியார் திட்டமிட்டார். சட்டமன்றத்தில் துரைமுருகன் அம்மா அவர்களை பெண் என்று பாராமல் இழிவுப்படுத்தினார். அம்மாவின் மரணத்திற்கு திமுகவினரே காரணம். அப்படிப்பட்டவர்களுடன் கூட்டணி வைக்கலாமா? இதை எப்படி எடப்பாடி பழனிசாமி சிந்தித்தார்? எனக்கு பெயர் வைத்தவர் எம்.ஜி.ஆர். அதனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை," என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.

த.வெ.கவில் இணைந்ததற்கு ரூ.50 கோடி வாங்கியதாக அதிமுகவினர் கூறுவதை மறுத்த மரகதம் குமரவேல், "முடிந்தால் ரெய்டு விட்டு பார்க்கட்டும். திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க குதிரை பேரம் நடத்தியவர் இ.பி.எஸ் தான். பெண் என்றும் பாராமல் என்னை மிகவும் கொச்சைப்படுத்தினார்கள்," என்று அவர் கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version